Sunday 28th of April 2024 01:55:04 AM GMT

LANGUAGE - TAMIL
-
இராணுவ ஆட்சியால்  இலங்கைக்கே பேராபத்து - லக்ஸ்மன் கிரியெல்ல எச்சரிக்கை!

இராணுவ ஆட்சியால் இலங்கைக்கே பேராபத்து - லக்ஸ்மன் கிரியெல்ல எச்சரிக்கை!


"சுயாதீனமாக இயங்கிவரும் அரச துறையை இராணுவத்தின் தலைமைத்துவத்திற்கு கீழ் அரசு கொண்டுவந்துள்ளது. இது அரசமைப்புக்கு முரணான செயற்பாடாகும்."

- இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஸ்மன் கிரியெல்ல குற்றஞ்சாட்டியுள்ளார்.

அரசு படிப்படியாக இராணுவ ஆட்சிக்கு வித்திட்டு வருகின்றது எனவும், இது எதிர்காலத்தில் இலங்கைக்குப் பேராபத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"அரசமைப்பின்படி அரச சேவையானது சுயாதீனமாக இயங்கவேண்டிய துறையாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் பாதுகாப்புச் செயலாளர், பதில் பொலிஸ்மா அதிபர், இராணுவத் தளபதி உள்ளிட்ட 13 இராணுவத்தினரைக் கொண்ட ஜனாதிபதி செயலணியின் ஆணைக்கமைய அரசதுறை இயங்க வேண்டும் என்று குறிப்பிட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இராணுவ ஆட்சியை முன்னெடுப்பதற்கான திட்டங்களில் ஒன்றாகவே இதனைக் கருத முடிகின்றது. அரச துறையினர் என்றுமே இராணுவத்தினரையும்விட உயர்மட்டத்தில் வைத்து பார்க்கப்பட்டு வருபவர்கள். இவர்களை இன்று இராணுவத்தினரின் ஆணைக்கு அமைவாக செயற்படுமாறு இந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு செயற்படாவிட்டால் அவர்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவிக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் பெரும் அனர்த்தத்தை ஏற்படுத்தும்.

ஒரு நாடு, பொதுச் சட்டம் என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் அதனை முறையாகப் பின்பற்றுகின்றார்களா? தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டம் எல்லோருக்கும் சமமான முறையில் செயற்படுத்தப்படுகின்றதா? நாட்டு மக்களுக்கு ஒருவகையிலும், ஆட்சியாளர்களுக்கு இன்னொரு வகையிலும் இந்தச் சட்டம் செயற்படுவதை அண்மையில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

இவ்வாறு இந்தச் சட்டங்கள் மீறப்பட்டபோது கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் உறுப்பினர்கள் தலைமறைவாகினர். தொலைக்காட்சி முன்னில் வந்து நாட்டு மக்களுக்கு பல்வேறு உத்தரவுகளை விடுத்து வந்த அவர்கள், அந்தக் குறிப்பிட்ட தினங்களில் எங்கிருந்தார்கள் என்றுகூட தெரிந்துக்கொள்ள முடியாமல் இருந்தது" - என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE